வரைக்காட்சிப் படலம் - 959
959.
கோள் இபம் கயம் மூழ்க. குளிர் கயக்
கோளி. பங்கயம். ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி. ஏய்.
ஆளி பொங்கும். அரம்பையர் ஓதியே.
கோள் இபம் - வலிமையுள்ள யானைகள்; கயம் மூழ்க - அம்
மலையிலுள்ள நீர்நிலைகளில் மூழ்கி விளையாட; குளிர் கயக் கோளி -
(அக் குளத்தின் கரையிலுள்ள) குளிர்ச்சி தரும் பெரிய ஆல
மரங்களும்; பங்கயம் ஊழ்க - தாமரை மலர்களும் நலம் கெட்டு;
குலைந்த - குலைந்தன; ஆளி பொங்கும் - சிங்கங்கள் சீறியெழும்;
மரம் பையர் ஓதி - மரங்களைப் பக்கத்தேயுடைய மலையில்;ஏய் அரம்
பையர் - தங்கிய தேவமாதரின்; ஓதி ஆளி பொங்கும் - கூந்தலில்
வண்டுகள் மகிழ்ச்சியுடன் தங்குவன.
யானைகள் அம் மலையின் கயத்திலே மூழ்குவதால் அந்த
நீர்நிலையிலுள்ள தாமரையும். அக் குளக் கரையிலுள்ள ஆலமரமும்
அழிந்தன. ஒரு பக்கம் தேவமாதர் தங்குவதனால் அவர்களின்
கூந்தலில் தேனைப் பருகி வண்டுகள் களித்து நிற்கும் என்றார். ஆளி
-அளி என்பதன் நீட்டல் விகாரம். ஓதி: பெண் மயிர். மலை. 32
