வரைக்காட்சிப் படலம் - 946
946.
பூ அணை பலவும் கண்டார்;
பொன்னரிமாலை கண்டார்.
மே வரும் கோபம் அன்ன
வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப்
பிரிந்து. அறிவு அழிந்த விஞ்சைப்
பாவையர் வைக. தீய்ந்த
பல்லவ சயனம் கண்டார்.*
(அல்லாமலும்) பூ அணை பலவும் கண்டார் - (அங்குள்ள மக்கள்)
மலர்ப் படுக்கை பலவற்றைப் பார்த்தார்கள்; பொன் அரி மாலை
கண்டார் - (புலவியால் எறிந்த) பொன்னரி மாலைகளைக் கண்டார்கள்;
மேவரும் கோபம் அன்ன - விரும்பத்தக்க இந்திர கோபப் பூச்சியை
ஒத்த; வெள்ளிலைத் தம்பல்- வெற்றிலைத் தம்பலங்களை; கண்டார் -
பார்த்தார்கள்; ஆவியின் இனிய - (தம்) உயிரினும் இனியரான;
கொண்கர் பிரிந்து - கணவரைப் பிரிந்து; அறிவு அழிந்த - மதியை
இழந்த; விஞ்சைப் பாவையர் வைக - வித்தியாதர மகளிர்
தங்குவதால்; தீய்ந்த பல்லவ சயனம் - தீய்ந்துவிட்ட
தளிர்ப்படுக்கைகளையும்; கண்டார் - பார்த்தார்கள்.
இவை வெவ்வேறிடங்களில் அமைந்த காட்சிகளாதலின் ‘கண்டனர்
கண்டனர்’ என்று தனித் தனியே கூறினார். தம்பல் - தம்பலம்:
வெற்றிலை பாக்கை மென்று உமிழ்ந்தது. 19
