பி.எஸ்.வீரப்பா

பி.எஸ்.வீரப்பா

bookmark

ஆரம்பக் கால வாழ்க்கை:

1911-ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். சிவன் மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் அனுப்பினார்.

திரைப்பட வாழ்க்கை:

பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கரச் சிரிப்பு அந்தக்காலத்துத் திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம். கே. பி. சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின் மணிமேகலை என்கிற திரைப்படத்தில் வீரப்பா அறிமுகமானார். தனது முத்திரைச் சிரிப்பான உரத்த ஹா ஹா ஹா.. என்பதைச் சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் செய்தார். இந்தச் சிரிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன் பிறகு, இதைத் தனது பணியாக எல்லா படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோரிலிருந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் படங்கள் வரை நடித்துள்ளார்.

அவர் நடித்த திரைப்படங்கள் சில:

  • ஸ்ரீ முருகன் (1946)

  • இதய கீதம் (1950)

  • மாப்பிள்ளை (1952)

  • மதன மோகினி (1953)

  • ஜெனோவா (1953)

  • நாம் (1953)

  • காவேரி (1955)

  • அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)

  • மர்ம வீரன் (1956)

  • மகாதேவி (1957)

  • தங்கமலை ரகசியம் (1957)

  • செங்கோட்டைச் சிங்கம் (1958)

  • சிவகங்கை சீமை (1959)