நகர் நீங்கு படலம் - 1859
இராமன் மறுமொழி
இராமன் தந்த விளக்கம்
1859.
‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ?’ என்றான் -
தோன்றி நல் அறம் நிறுத்தத் தோன்றினான்.
தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் - விளங்கிய நல்ல
தருமத்தை உலகில் நன்கு நிலைபெறுத்த அவதாரம் செய்த இராமன்
(வசிட்டனை நோக்கி); ‘எந்தை - என் தந்தையாகிய தசரதன்;
இவ்வரங்கள் - இந்த இரண்டு வரங்களையும்; ஏன்றனன் - தருவதாக -
தந்ததாக ஒப்புக்கொண்டான்; ஈன்றவள் - என் தாய்; ஏவினாள் -
ஆணை இட்டாள்; அது - அந்த உத்தரவை; யான் -; சென்னி
ஏந்தினேன் - தலைமேல் தாங்கினேன்; சான்று என நின்ற நீ -
இவற்றுக் கெல்லாம் சாட்சியாக இருந்த நீ; தடுத்தியோ? - இதனை
விலக்குகிறாயோ?’ என்றான் -.
வரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு அரசன் ‘என்னை நேராகக்
காட்டுக்குச் செல்’ என்று பார்த்துச் சொல்லவில்லை; ஆதலின், காடு
செல்வது அரசன் ஆணையன்று என்று வாதிடுவது பொருந்துமா?’
என்கிறான் இராமன். ‘சகல சாத்திரங்களும் அறிந்தவனாகிய நீ இப்படிச்
சொல்லலாமா’ என்பான் ‘சான்று என நின்ற நீ’ என்றான் என்பதும்
ஆம். 164
