தாமஸ் ஆல்வா எடிசன் - 1

தாமஸ் ஆல்வா எடிசன் - 1

bookmark

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். வாருங்கள் இவரைப் பற்றி அறிந்து கொள்வோம். அறியாத சில தகவல்களை.

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.

தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.

தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.

1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது.

அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம்.