ஜெகதீச சந்திரபோஸ் - 2

ஜெகதீச சந்திரபோஸ் - 2

bookmark

வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் புகழும் மார்கோனிக்கு முன்னதாகவே அதன் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ஜெகதீச சந்திர போஸ். ஆனால், அதனை அவர் தனது காப்புரிமையாக பதிவு செய்வதைத் தவிர்த்தார். அதன் காரணமாகவே, அந்த கண்டுபிடிப்புகளுக்கான பெருமை (1897) மார்கோனியைச் சென்றடைந்து. அவரது ரேடியோ அலைகளை ஈர்க்கும் 'செமி கண்டக்டர்' குறித்த ஆய்வு முடிவுகள், பிற்காலத்தில் கண்டறியப்பட்ட (தற்போது புழக்கத்திலுள்ள) என்-பி-என் மின்னணுவியல் கண்டுபிடிப்பில் மிக்க உதவியாக இருந்தன.

நோபல் விஞ்ஞானி சர். நெவில் மோட் (1977), ''ஜெகதீச சந்திர போஸ் தான் வாழ்ந்த காலத்திலேயே, பின்னாளில் 60 ஆண்டுகள் கழித்து நிகழவுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தை கணித்திருக்கிறார்'' என்று புகழ்கிறார். இயற்பியலில் மட்டுமல்லாது, உயிரியல், தாவரவியல், தொல்லியல் ஆகியவற்றிலும் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர் போஸ். தாவரங்களின் இயங்கியல் குறித்த போசின் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளன.

ரேடியோ அலைகளுக்கு தாவரங்கள் எதிர்விளைவு காட்டுவதையும், தாவரங்களின் திசுக்களும் விலகுகளின் திசுக்களும் ஒத்திருப்பதையும், போஸ் தான் கண்டறிந்த கருவி மூலமாக நிரூபித்தார். தாவரங்களுக்கும் உயிருண்டு என்று தனது 'கிரஸ்கோ கிராப்' கருவியால் உலகிற்கு போஸ் நிரூபித்துக் காட்டினார். இனிய இசையால் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுவதையும் போஸ் கண்டறிந்தார். ரசாயனங்களால் தாவரங்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதையும் போஸ் கண்டறிந்தார்.

''தாவரங்களும் மனிதர்களைப் போலவே வழியால் துடிக்கின்றன; மனிதர்களைப் போலவே அன்புக்காக ஏங்குகின்றன'' என்று போஸ் பிரகடனம் செய்தார். தாவரவியலிலும், உயிர் இயற்பியலிலும் போஸ் கண்டறிந்து கூறிய உண்மைகள் பிற்கால விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. பல அரிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் கண்டறிந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்வதை போஸ் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது உலகை சுரண்டுவதாகும் என்று அவர் கருதினார்.

கம்பியில்லா தொலைதொடர்பில் மின்காந்த அலைகளின் பயன்பாடு, மின்காந்த அலைகளின் அலைநீளத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் போஸ் உருவாக்கிய கருதுகோள்கள் முன்னோடியாக இருந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட சொத்தாக அவர் சொந்தம் கொண்டாடவில்லை. அதன் காரணமாக வானொலியைக் கண்டறிந்த விஞ்ஞானி என்ற சிறப்பை மார்கோனி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, போசை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காக பெரும்பொருள் வழங்குவதாக அறிவித்தபோதும், போஸ் அதனை ஏற்கவில்லை. தனது கண்டுபிடிப்புகள் உலகம் நன்மை பெற பயன்படுமானால், யார் வேண்டுமாயினும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போஸ்.

எனினும், போசின் அமெரிக்க நண்பர்கள், அவரது கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (பேட்டன்ட்) பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியின் வேண்டுகோளை ஏற்று, தனது 'மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்' என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து காப்புரிமை (US755840) பெற்றார் போஸ். அந்த வகையில், இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி என்ற சிறப்பை (1901)போஸ் பெற்றார்.

போஸ் விஞ்ஞானி மட்டுமல்ல. வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் ஆவார். 'நிருடேஷ்வர் கஹ்னி' என்ற போசின் அறிவியல் புதினம், வங்க மொழியில் எழுதப்பட்ட முதல் அறிவியல் புதினமாகும்.

பலநூறு அறிவியல் கட்டுரைகளை வங்க மொழியில் எழுதியுள்ள போஸ், Response in the Living and Non-லிவிங் (1902) , Plant response as a means of physiological investigation (1906), Comparative Electro -Physiology, Researches on Irritability of Plants (1913), Physiology of the Ascent of Sap (1923), The physiology of photosynthesis (1924), The Nervous Mechanisms of Plants (1926), Plant Autographs and Their Revelations (1927), Growth and tropic movements of plants (1928), Motor mechanism of plants(1928) ஆகிய ஆராய்ச்சி நூல்களையும் உலகிற்கு வழங்கியுள்ளார்.

1917 ல் கொல்கத்தாவில் போஸ் ஆராய்சிக் கழகத்தை நிறுவினார் போஸ். இன்றும் அது தனது அறிவியல் பணியை செம்மையாகச் செய்து வருகிறது. 1937, நவ. 23 ல் டாக்டர் சர். ஜெகதீச சந்திர போஸ் மறைந்தார். உலக அளவிலான பல்வேறு விஞ்ஞானக் கழகங்களின் விருதுகளையும் சர் உள்ளிட்ட கௌரவப் பட்டங்களையும் போஸ் பெற்றவர் போஸ். பணமும், அதிகாரமும் ஜெகதீச சந்திர போசை என்றும் மயக்கியதில்லை. அறிவியல் ஆய்வே தனது வாழ்வாகக் கொண்டிருந்த மகத்தான மேதையான போஸ், இக்கால விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டி.