கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
வாழ்க்கைக் குறிப்பு:
தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசமுன்னேற்றம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். பின்னர் சக்ரதாரி (1948), பாரிஜாதம் (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
பின்னாட்களில் கமலஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றிய பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
அவரின் சிறப்பியல்புகள்:
1960ஆம் ஆண்டுகளில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர்களில் ஒருவராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திகழ்ந்தார். குடும்பப் படங்கள் என்று கூறப்படுனவற்றைக் குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தமைக்காக இவர் சிறப்பாக அறியப்பட்டார்.
புரட்சிகரமான கருத்துக்களை அளிப்பதிலும் இவர் பின் தங்கியதில்லை. எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி நடித்த சாரதா இதற்கு ஒரு உதாரணம். விபத்தினால் ஆண்மையை இழந்து விட்ட கதாநாயகன் தனது காதல் மனைவிக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டி அவளை மறுமணத்திற்கு வற்புறுத்துவதான கதை, இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்தாக அமைந்து பரபரப்பாகப் பேசப்பட்டது.
கதாபாத்திரங்களின் குண இயல்புகளைச் சித்தரிப்பதில் மிகவும் வல்லவராக விளங்கினார். சித்தி திரைப்படத்தில் பத்மினி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் சாவித்திரி போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாடகபாணி வசனத் திரைப்படங்களை இயக்குவதாக இவர் மீது விமர்சனம் இருந்தது. இவரது படங்களை வசனங்களே ஆக்கிரமித்துக் கொண்டன என்பது உண்மைதான் என்றபோதும், அந்த வசனங்களும் இயல்பானவையாக, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன. அடுக்கு மொழி, அலங்கார வசனங்கள் அன்றி, அன்றாட மக்களின் வாழ்விலிருந்தே தமது வசனங்களை இவர் தேர்ந்தெடுத்தார்.
டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் ரஷ்ய நாவலைத் தழுவி பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த திரைப்படம் என்னதான் முடிவு என்பதாகும். வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும், இன்றளவும் ஒரு சோதனை முயற்சியாக இது பாராட்டப்பெறுகிறது.
அவரின் சில புகழ் பெற்ற திரைப்படங்கள்:
-
தெய்வப்பிறவி (1960)
-
தெய்வத்தின் தெய்வம் (1962)
-
சாரதா (1962)
-
கற்பகம் (1963)
-
கை கொடுத்த தெய்வம் (1964)
-
ஆயிரம் ரூபாய் (1964)
-
என்னதான் முடிவு (1965)
-
சின்னஞ்சிறு உலகம் (1966)
-
செல்வம் (1966)
-
சித்தி (1966)
-
பணமா பாசமா (1968)
-
உயிரா மானமா (1968)
-
மாலதி (1970)
-
குலமா குணமா (1971)
-
நத்தையில் முத்து (1973)
-
ஆதி பராசக்தி (1971)
-
குறத்தி மகன் (1972)
-
மறைவு :
நவம்பர் 14 2015 ஆம் ஆண்டு அவரின் 85 ஆவது வயதில் காலமானார்.
