எழுச்சிப் படலம் - 863

bookmark

மகளிர் சிலம்பும் குதிரையும் ஒலித்தல்

863.    

உழை கலித்தன என்ன உயிர்த் துணை
நுழை கலிக் கருங் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன் இயமா. எழும்
மழை கலித்தென. வாசி கலித்தவே.
 
உயிர்த்துணை  நுழை- ஆண்களின் உயிர்வரை  சென்று நுழையும்;
கலி  -  வலிமையுள்ள; கருங்கண்ணியர்  -   கரிய  கண்களையுடைய
மாதர்கள்  பூண்ட;  நூபுரம் இழை - சிலம்பென்னும்  அணிகள்; உழை
கலித்தன   என்ன   -   மான்கள்  செருக்கி   எழுந்தன  எனத்தக்க
தோற்றமுடைய  உழை  என்னும்  பண்  ஒலித்தாற் போல; கலித்தன -
ஒலித்தன;   இன்   இயமா  -   (அவ்வாறு  ஒலித்தவற்றுக்கு)  இனிய
பக்கவாத்தியமாக;  எழுமழை கலித்து என -(வானத்தில்) எழும் மேகம்
இடித்தாற் போல; வாசி கலித்த - குதிரைகள் கனைத்தன.

ஒருவர்    பாடுகையில் அதனைச் சிறப்பித்தற்காக மத்தளம் முதலிய
வாத்தியங்கள்    முழக்கப்படுவது   மரபு;   அதுவே    பக்கவாத்தியம்
எனப்படும்.   மாதர்    சிலம்புகள்   ஒலிக்க  அந்த  இசைக்குப்  பக்க
வாத்தியம்   என்று   சொல்லுமாறு  குதிரைகள்  கனைத்தன.  இழை -
இழைத்துச் செய்யப்பெறும் ஓர் அணி.                          47