கார்முகப் படலம் - 778
778.
கரங்கள் குவித்து. இரு கண்கள் பனிப்ப.
‘இருங் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின்.
நரந்த நறைக் குழல் நங்கையும். நாமும்.
முருங்கு எரியில் புக மூழ்குதும்’ என்பார்.
கரங்கள் குவித்து- (சில மாதர் தம் வழிபடு தெய்வங்களை
நினைந்து) தம் கைகளைக் கூப்பிக் கொண்டு; இருங்களிறு -
ஆண்யானை போன்ற இக்குமரன்; இச் சிலை - இந்த வில்லை; இரு
கண்கள் பனிப்ப - எங்களுடைய இரு கண்களும் ஆனந்தக் கண்ணீர்
சொரியுமாறு; ஏற்றிலன் ஆயின் - நாண் ஏற்றாமல் போவானேயானால்;
நரந்தம் நறை - கஸ்தூரி மணம் கமழும்; குழல் நங்கையும் -
கூந்தலையுடைய சீதையும்; நாமும் - நாமும்; முருங்கு எரியில்-
எரிக்கும் நெருப்பில்; புக - அழுந்தி; மூழ்குதும் - மூழ்குவோம்;
என்பார் - என்று சொல்வார்கள்.
‘இக் குமரன் வில் இறுக்காவிட்டால் சீதை கன்னியாகவே
இறக்கவேண்டிவரும். அதைவிட நெருப்பில் பாய்ந்து உயிர் விடுதலே
மேலானது. நம் அன்பான தோழி அவ்வாறு செய்தால் நாமும்
அவளோடு எரிபுகுந்து இறப்போம்’ என்றார் சில பெண்கள். நரந்தம் -
கத்தூரி ‘நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக’ - மதுரைக் காஞ்சி.
553. 29
