கார்முகப் படலம் - 777

bookmark

மாதர்கள் கூற்று (777-780)

777.    

‘காணும் நெடுஞ் சிலை கால் வலிது’ என்பார்;
‘நாணுடை நங்கை நலம் கிளர் செங் கேழ்ப்
பாணி. இவன் படர் செங் கை படாதேல்.
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்’ என்பார்.
 
(சில     மாதர்) காணும் - காணப்படுகின்ற; நெடுஞ்சிலை - நீண்ட
இந்த  வில்;  கால் வலிது  என்பார் - அடிப் பகுதி வலிமையுடையது
என்றுசொல்வார்கள்;   நாண்  உடை   நங்கை   -   (சில   மாதர்)
நாணத்தையுடைய   சீதையின்;   நலம்கிளர்   -  அழகு  விளங்கும்;
செங்கேழ்ப் பாணி - சிவந்த கையில்; இவன் படர் செங்கை - இந்த
இராமனது      நீண்ட கைகள்;    படாதேல் - பற்றாமல்  போனால்;
(இராமன்  சீதையைப்  பாணிக்  கிரகணம்   செய்யா  விட்டால்); வாள்
நுதல்  நங்கையும்  -  ஒளியுள்ள  நெற்றி படைத்த சீதையும்; வாழ்வு
இலள் - (இனி) வாழ்வு அற்றவளே; என்பார் - என்று சொல்வார்கள்.  

நங்கையும்     - உம்மை  இராமனும்  வாழ்வு   இலன் என்பதைக்
குறிக்கும்.  நங்கை  வாழ்விலள்   என்பதற்கு  -  சீதை   மணமின்றிக்
கன்னியாகவே இருக்க வேண்டியவள்தான்  என்ற  கருத்துப்  புலனாகும்.
இதுவரை  ஆற்றல்  மிக்க  அரசர்  பலரும்   தோற்றோடிய  செயலை
அறிந்தவராதலால்  இந்தக் குமரனும் அத்தகையவன்  ஆவனோ  என்று
மாதர் இரங்கிக் கூறினர்.                                     28