கார்முகப் படலம் - 774

bookmark

விசுவாமித்திரன் முகக்குறிப்பை அறிந்த இராமன்
வில்லினை நோக்கி எழுதல்
 
774.
 
நினைந்த முனி பகர்ந்த எலாம்
   நெறி உன்னி. அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கி.
   போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி
   வள்ளலும். அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து. அந்த
   நெடுஞ் சிலையை நோக்கினான்.
 
அம்    முனி  -  அந்தச்  சதானந்த  முனிவன்;   நினைந்து  -
ஆலோசித்து; பகர்ந்த எலாம் - கூறியவற்றை யெல்லாம்; அறிவனும் -
ஞானியான  கோசிகனும்;  நெறி  உன்னி - முறைப்படி சிந்தித்து; தன்
சடை  புனைந்த  முடி  -  (சதானந்தன்  கூறிய  சொல்லுக்கு  உடன்
பட்டதைக்  குறிப்பிக்குமாறு)  அழகிய  தன் சடைமுடியை;  துளக்கி -
அசைத்தவனாய்;  போர்  ஏற்றின்  -  போர்  செய்ய  வல்ல  காளை
போன்ற  இராமனது;  முகம் பார்த்தான் - முகத்தை (இந்த வில்லை நீ
முறிப்பாயாக  என்னும் குறிப்பில்) நோக்கினான்; வனைந்தது  அனைய
- ஓவியத்தில் எழுதியது போன்ற; திருமேனி  வள்ளலும் - திருமேனிப்
பொலிவுள்ள அந்த இராமனும்; அம்  மாதவத்தோன் - பெருந்தவத்தை
யுடையவனான  விசுவாமித்திரன்; நினைந்த எலாம் - எண்ணிய  மனக்
குறிப்பையெல்லாம்;   நினைந்து   -  தானும்  கருதி  (பிறகு);  அந்த
நெடுஞ்சிலையை  -  நெடிய  அந்தச்  சிவதனுசை;  நோக்கினான்  -
பார்த்தான்.  

‘நினைந்து     முனி பகர்ந்த எலாம்  நெறியுன்னி’  என்றது தெய்வ
இயல்பு   வாய்ந்தவள்   சனகன்   மகள்    என்பதனையும்   அவளை
அடைவதன்   அருமைகளையும்   ‘இவன்   ஏற்றின்   நன்று’   என்று
சதானந்தர்  கூறியதையும்  உட்கொண்டு.  வனைந்தனைய - வனைந்தது
அனைய.   அல்லது   வனைந்தால்    அனைய   எனலாம்.  வில்லை
நோக்கியது  - இந்த வில்லை எந்த இடத்தில் பற்றி   எடுக்கலாம் என்ற
ஆலோசனையால்  ‘போரேறு’  -  ‘புட்குழிஎம் போரேற்றை’ - (பெரிய
திருமடல். 117).                                             25