கார்முகப் படலம் - 775

bookmark

இராமன் எழுதல்

கலி விருத்தம்   

775.    

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
‘அழிந்தது. வில்’ என. விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள். முப் பகை வென்றார்.
 
பொழிந்த நெய்- ஒருசேரச் சொரிந்த நெய்யாகிய;ஆகுதி வாய்வழி
-  ஆகுதி  வீழ்ந்த இடத்திலிருந்து; பொங்கி எழுந்த - பொங்கி மேல்
எழுந்த;  கொழுங்கனல் என்ன - நன்றாக எரிகின்ற நெருப்புப் போல;
எழுந்தான்   -   (இராமன்  சிவதனுசு  வைத்துள்ள  இடம்  நோக்கி)
செல்லலானான்;   விண்ணவர்  -  (அப்போது)  தேவர்கள்  (இராமன்
வில்லை  முறிப்பது  உறுதி  என்ற துணிவால்); வில் அழிந்தது என -
சிவதனுசு   முறிந்து   விட்டது   என்று;   ஆர்த்தார்  -  ஆரவாரம்
செய்தார்கள்;  முப்பகை  வென்றார் - (காமம். வெகுளி. மயக்கம்என்ற)
மூன்று      உட்பகைகளையும்   வென்ற    முனிவர்;    ஆசிகள் -
(இராமனுக்கு) வாழ்த்துக்களை; மொழிந்தனர் - கூறினார்கள்.  

முனிவனது     குறிப்பு தன் வீரத்தைத் தூண்டியதும் அந்த வில்லை
நோக்கிய  இராமன்  உடனே எழுந்தான் என்பது. வேள்வி   நெருப்பில்
ஒருசேரப்   பொழியப்பெற்ற   நெய்யின்  ஆகுதி.    இராமனது  வீரக்
கனலைத்   தூண்டிய   முனிவரது   குறிப்பு   நோக்கத்திற்கு  ? ஏற்ற
உவமையாயிற்று.  ‘நெய்பெய்  தீயின்   எதிர்கொண்டு’  -  குறுந்.  106.
வேள்விக் கனல் உவமையால் தூய்மையும்  நன்மையும் தொனிக்கும்.26