ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

bookmark

வாழ்க்கை வரலாறு

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.

ஆரம்ப வாழ்க்கை:

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தமிழ் நாட்டில் குடியேறிய ஒரு தெலுங்கு ரெட்டியார் குடும்பத்தில் பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

முதலமைச்சர்:

ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்.

ஹைதராபாத் இணைப்பு:

ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஓமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்பு ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஓமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

இறுதி வாழ்வு:

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஓமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தில் லயித்தது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். 25-8-1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.

நினைவு:

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.