உண்டாட்டுப் படலம் - 1078

bookmark

ஒருத்தி ஊடலைப் பாடிக் குறிப்பித்தது

1078.

மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி. தன் பாங்குளார்களோடு
ஊடினது உரைசெயாள். - உள்ளத்து உள்ளதே.
 
ஒருத்தி. ஊடினது தன் பாங்குளார்களோடு உரை செயாள்- ஒரு
மங்கை.   தான்    தன்    கணவனோடு    பிணங்கியுள்ளதைத்   தன்
தோழியரோடு  வாய்திறந்து  சொல்லாதவளாய்;  மாடகம் பற்றிய மகர
வீணையை   -   முருக்காணி   பொருந்திய   மகரமீன்  வடிவமைந்த
வீணையினை; தன் தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
-  இதழ்கள்  விரிந்த தாமரைப் பூப்போன்ற தன் கரங்கள் சிவப்புறும்படி
தொட்டு;  தன் உள்ளத்து  உள்ளது பாடினள் - தன் உள்ளத்துள்ளே
மறைந்த  ஊடற்  காரணங்களைத்  (தன்  கணவன்  மட்டுமே குறிப்பால்
உணர்ந்து கொள்ளுமாறு வீணையிலிட்டுப்) பாடினாள்.

தன்     உள்ளத்துள்ளதைப்   பாங்கிமார்   அறியின்.   அவனைத்
தூற்றுவர்;   அதனை   இவள்பொறாள்   ஆதலின்.  “உரை  செயாள்;
பாடினாள்”  என்றார்.  கணவன்  குறையைப்  பிறர் அறியாமல் பேணும்
பெண்மையின் தனிப்பண்பு சுட்டினார்.                          32