உண்டாட்டுப் படலம் - 1069
ஒருத்திக்கு மதுவுண்டதால், புருவம் வளைதலும்
நெற்றியில் வியர்வை உண்டாதலும்
1069.
கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக.
நினைப்பது ஒன்று. உரைப்பது ஒன்று. ஆம் ஒர் நேரிழை.
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது. குழவித் திங்களே.*
கனித்திரள் இதழ் பொதி செம்மை கண்புக - கொவ்வைக்
கனிபோன்று திரண்ட இதழ்களில் மிகுந்திருக்கிற செந்நிறம் கண்களில்
போய்ச்சேர;நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை
- மனத்தால் நினைப்பது ஒன்றும். வாயால் சொல்வது ஒன்றுமாக
ஆகிப்போன சிறந்த அணிகள் பூண்டாள் ஒருத்தியின்; தனிச் சுடர்த்
தாமரை முகத்துச் சாபமும் - தனி ஒளி வீசும் (அவள்) தாமரை
முகத்தில் உள்ள வில்போன்ற புருவங்களும்; குனித்தது;
குழவித்திங்கள் பனித்தது - வளைந்தன; நெற்றியென்னும் பிறைச்
சந்திரனும் வியர்த்தது.
கோபத்தின் குணங்கள் யாவும் கள் உண்பார்க்கு உளவாதல்
சுட்டியவாறு. “திங்களுள் தீத் தோன்றியற்று” (கலி 41: 24) என்றாற்
போல. “திங்களும் வியர்த்தது” என மதுவின் கொடுமை கூறியவாறு.
மதுவுண்பார் உள்ளமும் உரையும் ஒன்றுபடாமல் நினைப்பது ஒன்றும்
உரைப்பது ஒன்றும் ஆக ஆவார் என்பார். “நினைப்பது ஒன்று
உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை” என்றார். 23
