இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல் - 3 :-
1 கொரிந்தியர் 6:14, சிறப்பாக 15:1-3
இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார் என்னும் செய்தியை நான்கு நற்செய்திகளும் குறிப்பிட்டாலும், அவை தருகின்ற தகவல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஒத்த கருத்தாக உள்ளவை இவை:
1) "வாரத்தின் முதல் நாள்" பெண்கள் கல்லறைக்குச் சென்று, அது வெறுமையாயிருக்கக் கண்டார்கள்.
2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கு (ஒரு பெண்ணுக்கு) காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.
3) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார்.
4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
நற்செய்திகள் வேறுபடும் இடங்கள் இவை:
சரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள், யார் யார் அப்பெண்கள், எதற்காகப் போனார்கள், வெறுமையாகவிருந்த கல்லறை அருகே தோன்றியது "ஆண்டவரின் தூதரா" அல்லது "இளைஞரா", அவர்கள் பெண்களுக்குக் கூறிய செய்தி என்ன, பெண்கள் அதற்கு என்ன பதில் அளித்தார்கள் - என்பவை.
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு இயேசுவின் விண்ணேற்றம் நிகழ்ந்தது.
உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டுச் செய்தி
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றிய போது தோமாவும் கூட இருந்தார். இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை. மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று கூறிப் பணிந்தார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார் (காண்க: யோவான் 20:24-29).
எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).
திபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).
இயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).
கிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கருதுகிறார்கள். கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார். சாவின் மீது தாம் வெற்றி கொண்டது போலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார். புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழி நடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.
