ஆண்டொனி லாரண்ட் லவாஷியர்

bookmark

ஆண்டொனி லாரண்ட் லவாஷியர், விஞ்ஞானிகள் வரிசையில் இன்னொரு மாமேதை. அக்காலத்தில் மூட நம்பிக்கை ஓங்கி இருந்தது. எல்லாம் தெய்வத்தின் அருளால் தான் நடக்கிறது என மக்கள் நம்பினர். மக்களை அப்படியே நம்பவைத்து பணம் பறித்தனர். அந்த எத்தர்களின் பித்தலாட்டங்களைத் தோல் உரித்துக் காட்டி, அறியாமையில் இருந்து அவர்களை தனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் தட்டி எழுப்பிய மாமேதை லாரண்ட் லவாஷியர். தனிமம் என்பதற்கு இலக்கணம் கூறியவர் இவர். பொருளாதாரம், விவசாயம் போன்றவற்றில் புரட்சிகளை செய்தவர். பொறுப்பார்களா? மத வெறியர்கள், இறுதியில் அவர் மேல் பொய் குற்றம் சாற்றி மரண தண்டனை விதித்தனர்.

லவாஷியர் கி.பி.1743 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிளாரன்ஸ் என்னும் மாநிலத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே அவரது தாயார் இறந்து விட்டார்கள், அதனால் அவரது அத்தை வீட்டில் தான் வளர்ந்தார் அவர். ஆனால், எந்த அத்தை, பெற்ற தாய் போல உலகத்தில் பிள்ளையை கவனிப்பார்கள். லவாஷியர் அவர்களும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தார். மெலிந்த உருவத்துடன் காணப்பட்டார், வயிற்று உபாதைகள் வேறு அவருக்கு இருந்தது. எப்போதும் மருத்துவச் செலவுகள். இப்படித் தான் அவரது சிறு வயது வாழ்க்கை கழிந்தது.

லவாஷியரின் தந்தை ஒரு சிறந்த சட்ட வல்லுநர். அதிலும், உயர் குடியில் பிறந்ததால் அந்நாட்டு மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர்.அவரது ஆசை தனது மகனையும் சிறந்த சட்ட வல்லுனராக மாற்ற வேண்டும் என்பது தான். லவாஷியரும், தந்தையின் விருப்பப்படி சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில ஆரம்பித்தார். கல்லூரில், அக்காலத்தில் மாணவர்களின் திறமையை வளர்க்க பலதரப்பட்ட வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதில் ஒரு நாள், ஒரு வேதியியல் ஆசிரியர் ஒருவர், வேதியியல் பாடம் பற்றி சிறப்பாக சொற்பொழிவு செய்தார். அன்றைய தினம் முதல் லவாஷியர் மனமும் வேதியியல் துறையில் ஈடுபட ஆரம்பித்தது.அதனால், எப்போதும் நூலகத்திலேயே இருப்பார் லவாஷியர், அறிவியல் நூல்களை ஒன்று விடாமல் எடுத்துப் படிப்பார்.குறிப்புகள் எடுப்பார். அச்சமயத்தில் தான் நில நூல் அறிஞர் "ஜூன் கெட்டார்டு" என்பவருடன் லவாஷியருக்கு நட்பு ஏற்பட்டது.

லவாஷியரின் திறமையைக் கண்ட அவர் துணை ஆய்வாளராக சேர்த்துக் கொண்டார். அச்சமயத்தில் ஜூன் கெட்டார்டுவை அந்நாட்டு அரசாங்கம் நாட்டின் கனிவளம், நிலயியல் விவரம் போன்றவைகளைக் கொண்ட தேசிய வரை படத்தை வரையுமாறு கேட்டுக் கொண்டு இருந்தது. அதனால் லவாஷியரை உதவிக்கு அழைத்துக் கொண்டு 1767 ஆம் ஆண்டு நில வரைபடங்களைச் சேகரிக்க தனது பயணத்தை தொடர்ந்தார். லவாஷியர் பயணத்தின் போது கெட்டார்டு அவர்களுக்குப் பேர் உதவியாக இருந்தார். அதனால், தனக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் லவாஷியருக்குக் கற்றுக் கொடுத்தார். பிறகு பாரிஸ் திரும்பிய லவாஷியருக்கு அப்பயணம் அவரது வாழ்க்கையிலேயே மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அது எப்படி எனில், அப்போது பிரஞ்சு அரசாங்கம் தங்களது பிரான்ஸ் நாட்டை அழகு படுத்த நினைத்தது. அதன் படி பாரீசை எந்த முறையில் அழகு படுத்தலாம். எவ்வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற வரைபடத்தை வரைந்து அனுப்புபவர்களுக்குப் பிரஞ்சு விஞ்ஞானக் கழகம் பாராட்டிப் பரிசளிக்கும் எனவும், நல்ல வரைபடத்திற்க்குத் தங்கப்பதக்கம் அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. லாவாஷியர் இதனைக் கேள்விப்பட்டு, தனக்கு முன் அனுபவம் இருந்த காரணத்தால் ஒரு அழகிய வரைபடத்தை வரைந்து பிரஞ்சு அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார். அவரது அந்த வரைபடத்தை பார்த்த பிரஞ்சு அரசாங்கம், அவரது திறமையைக் கண்டு வியந்ததுடன், அவரைப் பாராட்டி தாங்கள் அறிவித்தபடி தங்கப் பதக்கத்தை அவருக்கு அளித்தது.

அத்துடன் அவரது திறமையை பயன் படுத்திக் கொள்ள நினைத்த அந்நாடு, அவரை நிலவரித் தீர்வுகளை வசூல் செய்யும் அதிகாரியாக நியமித்தது. லவாஷியரும், தனக்குக் கொடுக்கப் பட்ட வேலையை மேலதிகாரி பாராட்டும் படி செய்தார்.பணி நிமித்தமாக அவரது மேலதிகாரியின் வீட்டிற்கு லவாஷியர் அடிக்கடி சென்று வந்ததால்,அவரது மகள் "அன்னி பெய்ரெட்டுடன்" நட்பு ஏற்பட்டு அது காதலாக பரிமாணம் அடைந்து இறுதியில் வெற்றியுடன் அவர்களது திருமணத்தில் முடிந்தது. அன்னி பெய்ரெட் வசதியான வீட்டில் வளர்ந்து இருந்தாலும், லவாஷியரின் அந்தக் குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்தக் கற்றுக் கொண்டாள். லவாஷியர் அவரது வருமானத்தில் ஒரு பகுதியை குடும்பத்திற்கு தருவார், மறு பகுதியை அவரது அறிவியல் ஆய்வுக்கு செலவு செய்வார். இதனால் வீட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமாகத் தான் அவர்களுக்கு இருந்து வந்தது. பெண்ணைப் பெற்ற அந்த தந்தையால் தனது மகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. தனது பதவியைப் பயன்படுத்தி லவாஷியருக்கு ஆயுத சாலையில் மேலாளர் பதவியைப் பெற்றுத் தந்தார். இதனால் அவர்கள் குடும்பச் செலவுக்கு போதிய வருமானம் கிடைத்தது. இருந்தாலும் லவாஷியர் அவரது அறிவியல் ஆய்வுப் பணியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து வந்தார். அந்த நேரத்தில் பிரிஸ்ட்லே, பிராங்களின் போன்ற அறிஞர் பெரு மக்களின் நட்பும் லவாஷியருக்குக் கிடைத்தது.ஜோசப் பிரிஸ்ட்லி குறையிலா வாயு ஒன்றைக் கண்டறிந்தார்.லவாஷியர் அந்த வாயுவுக்கு " ஆக்சிஜென்" எனப் பெயர் இட்டார் (அதாவது ஆக்சஸ் என்றால் அமிலம் என்று பொருள், ஜென்னன் என்றால் இயற்றுதல் என்று பொருள்). இந்த இரண்டையும் சேர்த்து "ஆக்சிஜென்" எனப் பெயர் வைத்தார். மேலும் தனது பலவித சோதனைகளின் விளைவாக மனித உடலில் அடிப்படையாக இருக்கும் வெப்பத்திற்க்குக் காரணம் உடலில் நடைபெறும் " எரிதல்" என்ற சக்தியால் என்பதை மக்களுக்கு புரியும் படி விளக்கினார். காவெண்டிஷ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த எரி இயல் வாயுவை மேலும் ஆராய்ந்து அதற்கு ஹைட்ரஜன் எனப் பெயர் இட்டார் ( இதில் ஹைட்ரோ என்றால் நீர், ஜென்னன் என்றால் இயற்றுதல் ஆக, இந்த இரண்டையும் சேர்த்து ஹைட்ரஜன் என்று பெயர் இட்டார்) மேலும் தண்ணீர் என்பது ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்த கூட்டுப் பொருள் என்பதை கண்டு பிடித்தார். இதற்கு ஆதாரமாக " ஹென்றி காவெண்டிஷ்" என்பவரின் ஆய்வுக் கட்டுரையை சுட்டிக் காட்டினார்.

இதன் காரணமாக லவாஷியரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.அதே போல வெடி மருந்து தயாரிக்கும் முறையையும் கண்டு பிடித்தார் இவர். அவர் மூலம் நவீன போர் கருவிகளையும், வெடி குண்டுகளையும் பெருக்கிக் கொண்டது பிரஞ்சு அரசாங்கம். நாட்டுக்கு உழைத்தால் மட்டும் போதாது, நாட்டு மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட லவாஷியர் மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை சாடினார். அதில் இருந்து மக்களை மீட்டு எடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் ஏழரைச் சனி ஆரம்பமானது. அப்பொழுது சில மதவாதிகள் " தண்ணீர் மரமாகிறது - மரம் சாம்பலாகிறது- நீர் மண்ணாகிறது- மண்ணை பொன்னாக்க முடியும்" இவைகள் அனைத்தும் தெய்வத்தின் அருளால் முடியும் என மக்களை மூடநம்பிக்கைகள் மூலமாக ஏமாற்றி வந்தனர். இவற்றை முறியடிக்க அவர் மேற்கொண்ட ஆராய்சிகளின் விளைவாக செடி மரமாவது தண்ணீரால் மட்டும் அல்ல, நீரின் சத்து, காற்றில் கலந்துள்ள துகள்கள், மண்ணின் சாரம் ஆகியவைகள் சேர்ந்தே மரமாகிறது என்று புரிந்து கொண்டு. தான் புரிந்து கொண்ட அறிவியல் உண்மையை மக்களுக்கும் எடுத்துக் கூறினார். இதனால், ஏமாற்றிக் காசு பணம் பார்த்த மத வாதிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். அத்துடன் லவாஷியர் நிற்கவில்லை, மண் பானையில் உள்ள நீரானது கொதிக்க வைக்கும் பொழுது பாத்திரத்தின் பக்கங்களில் அரிப்பு ஏற்பட்டு நீர் ஆவியான பிறகு பாத்திரத்தில் அவைகள் தங்குகிறது. அது நீரில் இருந்த மண் அல்ல என நிருபித்து நீர் மண்ணாவது இல்லை என விளக்கம் அளித்தார். கடைசியாக இரும்பை எக்காலத்திலும் எத்தகைய தெய்வீகத் தன்மை உடையவராலும் தங்கமாக மாற்ற முடியாது என எடுத்துக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி பொது உடைமைக் கருத்துக்களை அவர்களிடம் போதித்தார்.

இந்த ஆய்வுகளின் மூலமாக மக்களிடம் லவாஷியர் அதிக செல்வாக்கைப் பெற்றார், அந்த செல்வாக்கின் காரணமாக ஆர்லியான்ஸ் மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.லவாஷியர் வாழ்ந்த காலத்தில் " ஹான்போல் மாரா" என்ற மதவாதி, பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தான். அவன் லவாஷியர் மீது கொண்ட பொறாமையின் காரணமாக , தனது பத்திரிக்கையில் அவரைப் பற்றி மிகவும் தவறாக எழுதி வந்தான்.மக்கள் மத்தியில் லவாஷியர் ஒரு அயோக்கியன் என்ற விதத்தில் எழுதி மக்களை அவருக்கு எதிராகத் தூண்டிக் கொண்டு இருந்தான்.மாரா லவாஷியரை பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான் அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.மாரா எழுதி பிரஞ்சு அறிவியல் கழகத்திற்கு அனுப்பிய ஆய்வு நூல் அப்போது அதன் முக்கிய உறுப்பினராக இருந்த லவாஷியர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது , மாராவின் அந்த ஆய்வு நூல் ஏற்றுக் கொள்வதற்கு நம்பகத் தன்மை இல்லாதது என லவாஷியர் அதனை நீராகரித்தார். ஆக, மாராவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

மாரா லவாஷியரை பழிவாங்க மதவாதிகளுடன் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினான். ஆனால் அவனது எந்தத் திட்டங்களும் பலிக்க வில்லை. தருணம் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் தான் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது. அந்தப் பிரஞ்சுப் புரட்சியில் ஹான்போல் மாரா ஒரு போர் படைத் தலைவனாக மாறினான்.கொடுங்கோல் ஆட்சி செய்த லூயி மன்னனையும் அவரது மனைவியையும் சிறை பிடித்து இறக்கம் காட்டாமல், தலைவாங்கும் கருவியான கில்லட்டின் கருவியால் அவர்களின் தலைகளைத் துண்டித்தான். மேலும், அந்த மன்னர் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம் சாட்டி மாரா தனது ஆட்களை அனுப்பி லவாஷியரையும், அவரது மாமனாரையும் கைது செய்து இழுத்து வந்தான்.

மாராவின் ஆட்கள் லவாஷியரை கைது செய்தது மட்டும் அல்லாமல், அவரது ஆய்வுக் கூடத்தை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ, அவ்வளவு சேதப்படுத்தினார்கள். லவாஷியரின் வீடும் சூறை ஆடப்பட்டது. லவாஷியர் நீதி மன்றத்துக்கு உடனுக்குடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தயாராக இருந்த மதவாத பொய் சாட்சிகள் மூலம், லவாஷியர் மீது அடுக்கடுக்காக குற்றங்கள் சுமத்தப்பட்டது. அவருக்கு இறுதியில் மரண தண்டனையை விதித்தான் மாரா. கி.பி.1794 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் காலை 6.00 மணிக்கு பிரஞ்சு நாட்டுத் தலைவாங்கும் எந்திரமான கில்லட்டின் உதவியால் லவாஷியரை இரு துண்டுகளாக பிரித்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டான் மாரா. அவரது உடலைக் கூட பொதுமக்கள் அல்லது அவரது உறவினர் கைக்கு கிடைக்கக் கூடாது என்று எண்ணிய கொடுங்கோலன் மாரா. அவரது அந்த உடலை சிதைத்து, சின்னாபின்னப் படுத்தினான். அவ்வளவு பெரிய விஞ்ஞானி இறுதில் இப்படி ஒரு முடிவைக் கண்டார். இருந்தாலும், இன்னும் அவரது கண்டுபிடிப்புகளை நாம் பாட புத்தகத்தில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு விஞ்ஞானி மரணம் அடைந்தாலும், அவனது கண்டு பிடிப்புகள் ஒரு போதும் மரணம் அடையாது என்பதற்கு லவாஷியரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.