திருவெறும்பியூர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

898

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்

எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்

தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்

அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.1

899

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்

பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை

வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்

அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.2

900

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்

கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி

உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த

மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.3

901

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்

பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்

புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை

உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.4

902

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்

பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை

நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்

பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.5

903

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்

கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக

ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு

மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.6

904

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை

நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்

மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்

அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.7

905

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை

ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா

மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்

பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.8

906

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி

அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட

புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்

சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.9

907

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி

அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று

முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை

எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

6.91.10

திருச்சிற்றம்பலம்