திருக்கஞ்சனூர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

888

மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை

மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை

நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை

அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.1

889

தலையேந்து கையானை என்பார்த் தானைச்

சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்

கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை

மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.2

890

தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்

சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்

செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்

பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.3

891

விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை

மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்

பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்

இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.4

892

உருத்திரனை உமாபதியை உலகா னானை

உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்

பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை

நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.5

893

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை

இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்

செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.6

894

நாரணனும் நான்முகனு மறியா தானை

நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்

பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை

மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.7

895

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை

மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்

இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்

தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.8

896

நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை

நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்

சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை

விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.9

897

மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று

மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்

தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை

அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

6.90.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - கற்பகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்