திருவோமாம்புலியூர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

869

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை

அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை

எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை
ஊராரும் படநாக மாட்டு வானை

உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.1

870

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா

அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்

சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்

உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.2

871

வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை

வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்

சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி

உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.3

872

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ

அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ

விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்

உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.4

873

பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்

பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்

பாராத வகைபண்ண வல்லான் றன்னை
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்

உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.5

874

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை

ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை

மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்

பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.6

875

மலையானை வருமலையன் றுரிசெய் தானை

மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்

கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்

புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.7

876

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்

செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்

தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்

உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.8

877

வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று

மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே

இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்

பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

6.88.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

6.88.1

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர், தேவியார் - பூங்கொடியம்மை.

திருச்சிற்றம்பலம்