திருவின்னம்பர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

878

அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்

அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்

தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்

வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.1

879

கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்

கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்

உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்

அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.2

880

தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்

தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்

பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கண்ட மிறையே கறுத்தார் போலுங்

காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.3

881

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை

வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்

ஒளிநீறு பூசு மொருவர் போலுந்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்

தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.4

882

சூழுந் துயர மறுப்பார் போலுந்

தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்

ஆட லுகந்த அழகர் போலுந்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு

தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.5

883

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்

பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்

பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்

வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.6

884

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்

பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்

கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்

பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.7

885

மட்டு மலியுஞ் சடையார் போலும்

மாதையோர் பாக முடையார் போலுங்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்

காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்

ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.8

886

கருவுற்ற காலத்தே என்னை யாண்டு

கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்

தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்

மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.9

887

அலங்கற் சடைதாழ ஐய மேற்று

அரவ மரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்

வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை

விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6.89.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்