திருச்சிவபுரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
861
வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்
ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1
862
நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.2
863
வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.3
864
பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.4
865
தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.5
866
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.6
867
வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.7
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.
6.87.8-9
868
கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
