மிதிலைக் காட்சிப் படலம் - 605

bookmark

605.

நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;
காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே.
 
நோம் - (சீதை  காமநோயால்) வருந்துவாள்; உறும்நோய் நிலை
நுவலகிற்றிலள் -  (கணத்திற்குக்  கணம்  தன்னிடம்) மிகுகின்ற அக்
காமநோயின் நிலையை எவருடனும் சொல்ல முடியாதவளாய்; ஊமரின்
மனத்திடை  -   ஊமைகள்   போல  மனத்திற்குள்ளேயே; உன்னி
விம்முவாள் - நினைந்து தேம்புவாள் ; காமனும் -    (அப்பொழுது)
மன்மதனும்;     ஒரு சரம் - ஓர் அம்பினை; கருத்தில் - அவளது
மனத்திலே;  வேம்  எரி அதனிடை - எரிகிற நெருப்பிலே;  விறகு
இட்டு என்ன - விறகைப் போட்டாற்போல; எய்தனன் -   எய்தான்.  

மன்மதன். பாணம்: மன்மதன் தன்   ஐங்கணைகளுள்  நினைப்பை
மிகுவிக்கக் கூடிய தாமரை மலரைச் சீதைமேல் எறிந்தான்.        42