பாபநாசம் சிவன்
ஆரம்ப வாழ்க்கை:
இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமய்யா என அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில் பாபநாசம் சிவன் என்ற பெயருடன் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் வாக்கேயக்காரராக விளங்கினார். இவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இறங்கி வந்ததாகப் புகழ்ந்து தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.
தனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததினால் வறுமை காரணமாக, தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தமது இளவயது வாழ்க்கையைக் கழித்தார். அங்கு தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம் பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி ஆனார். சிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவ ஐயர், சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து பெற்றார். பஜனை செய்வதின் மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.
ஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன் பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை, நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப் பாடத் தொடங்கினார்.
1917-இல் சுப்பரமணிய ஐயரின் முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது. நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற இரு பெண் குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனையில் சிவன் தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன் பின்னர் பாபநாசம் சிவன் தென்னிந்தியா முழுவதிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது கச்சேரிகளை நடத்தினார்.
அவரின் இசைப் பணி:
பாபநாசம் சிவன் தனது முத்திரையாக ‘ராமதாஸ்’ என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று பல பாடல்களை இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை, புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன்.
1921 இல் சிவன் சென்னைக்கு வந்து தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.
இயற்றிய நூல்கள்:
1934 இல் 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது. இதன் பின் 31 ஆண்டுகளுக்குப் பிறகு 100 பாடல்களைக் கொண்ட இரண்டாவது நூலை வெளியிட்டார். பிறகு 101 பாடல்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியை சிவனின் 2 ஆவது மகள் ருக்மணி ரமணி வெளியிட்டார்.
10 ஆண்டுகள் உழைத்து 1952 இல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார். இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலை ஆக்கினார். காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் இசை நாடக நூலை எழுதினார்.
திரைப்படத் துறையில் அவரின் பங்களிப்புகள்:
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.
அவர் இயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்:
-
கருணாகரனே...சிவசங்கரானே...!
-
குருவாயூரப்பா...குழந்தாய்... முகுந்தா...
-
ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ?...
-
கற்பகமே கண் பாராயும்..
-
கணபதே, மகாமதே...
-
காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி
-
கா வாவா கந்தா வாவா... - வராளி
-
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி
-
தாமதமேன்... - தோடி
-
கடைக்கண்... - தோடி
-
கார்த்திகேயா காங்கேயா... - தோடி
-
மறைவு:
இவர் அக்டோபர் 1 ,1973 ஆம் ஆண்டு, அன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.
