எழுச்சிப் படலம் - 850
850.
தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை. ஒர் காளைதான்.
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்’ என்றான்.
தரங்க வார்குழல்- அலைபோன்று நீண்ட கூந்தலையும்; தாமரைச்
சீறடி - தாமரை போன்ற சிறிய அடிகளையும்; வாள் கருங்கண் -
வாள் போன்ற கரிய கண்களையும்; உடையாளை - உடைய ஒரு
பெண்ணை; ஒர் காளை - ஒரு வீரன்; நெருங்கு பூண் முலை -
அணிகள் பூண்ட நெருங்கிய முலைகளையும்; நீள்வளைத் தோளினீர்
- வளையல்களையணிந்த நீண்ட தோள்களையும் உடையவரே;
மருங்குல் - (நீங்கள்) உமது இடையை; எங்கு - எந்த இடத்தில்;
மறந்தது - மறந்து வைத்து விட்டீர்கள்; என்றான் - என்று கேட்டான்.
அந்த மங்கையின் இடை கண்ணுக்குப் புலனாகாதவாறு மிக
நுண்ணியதாக இருந்தது. அப்பெண்ணோடு உரையாட விரும்பியே
அந்த இளைஞன் இவ்வாறு வினாவினான். 34
