நீர் விளையாட்டுப் படலம் - 1027
1027.
கான மா மயில்கள் எல்லாம்
களி கெடக் களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்தம்
குழாத்து. ஒரு தோன்றல் நின்றான் -
வான யாறு அதனை நண்ணி.
வயின் வயின் வயங்கித் தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற
விரி கதிர்த் திங்கள் ஒத்தான்.
கானமா மயில்கள் எல்லாம் - காட்டில் வாழும் மயில்கள் யாவும்;
களிகெடக் களிக்கும் சாயல் - தம் (அழகுச்) செருக்கு அழியுமாறு
(கண்டார்) மகிழத்தக்க பொலிவினையுடைய தோற்றம் கொண்ட;
சோனைவார் குழலினார்தம் குழாத்து - கார்மேகம் போன்ற
கூந்தலினையுடைய மடந்தையர் கூட்டத்தின் இடையே; நின்றான் ஒரு
தோன்றல் - நின்றவனான அரசன் ஒருவன்; வானயாறு அதனை
நண்ணி - ஆகாய கங்கையை அடுத்து; வயின் வயின் வயங்கித்
தோன்றும் - அங்கங்கே ஒளி விளங்கித் தோன்றுகின்ற; மீன் எலாம்
சூழ நின்ற - விண்மீன்கள் எல்லாம் சூழ்ந்திருக்க; கதிர் விரி திங்கள்
ஒத்தான் - (அவற்றிலும்) ஒளிவிரியத் தோன்றுகின்ற சந்திரனைப்
போல இருந்தான்.
வான யாறு. நீர்நிலைகட்கும். மகளிர் நட்சத்திரங்கட்கும். அரசன்
சந்திரனுக்கும் உவமை. காட்டுமயில்களின் செருக்கையெல்லாம் இந்த
வீட்டு மயில்கள் தம் அழகால் அழித்தன என்கிறார். சோனை
விடாமழை துளிக்கும் கார்மேகம். அது கருமை
மிக்கதாயிருக்குமாதலின் “சோனை வார் குழலினார்” என்றார்.
“சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை” (கம்ப. 1491)
என்பார் பின்னும். “மீன் எலாம் சூழநின்ற விரிகதிர்த் திங்கள்”.
“பன்மீன் நடுவண் பான்மதி போல்” (சிறுபாண். 219) எனச் சங்கச்
சான்றோராலும் பாடப்பட்டுள்ளது. 14
