நகர் நீங்கு படலம் - 1814

1814.
காலைக் கதிரோன் நடு உற்றது ஓர்
வெம்மை காட்டி,
ஞாலத்தவர் கோ மகன், அந்
நகரத்து நாப்பண்,
மாலைச் சிகரத் தனி
மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றதுபோல்,
திரிகின்ற வேலை,-
ஞாலத்தவர் கோ மகன் - சக்கரவர்த்தியின் இளைய மகனாகிய
இலக்குவன்; காலைக் கதிரோன் - காலை இள ஞாயிறு; நடு உற்றது ஓர்
வெம்மை காட்டி -உச்சிக்கு வந்தாற்போன்ற ஒரு வெப்பக் கடுமையைக்
காட்டி; முந்தை - முன்காலத்தில்; மாலைச் சிகரத் தனி மந்தர மேரு -
ஒழுங்கான குடுமிகளை உடைய ஒப்பற்ற மந்தர மலை; வேலைத்
திரிகின்றது போல - கடலின் கண் (மத்தாக) சுழல்கின்றது போல;
அந்நகரத்து நாப்பண் - அவ் அயோத்தி நகர நடுவில்; திரிகின்ற
வேலை -சுழன்று வருகின்ற நேரத்தில்.
பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கிக் கடைந்த
போது ‘மந்தரமாலைசுழன்றதுபோல’ என அதனை இலக்குவன்
திரிகின்றமைக்கு உவமையாக்கினார். 119