நகர் நீங்கு படலம் - 1815

இராமன் நாணொலி கேட்டல்
இலக்குமணன் நாணொலி கேட்டு இராமன் வருதல்
1815.
வேற்றுக் கொடியாள்
விளைவித்த வினைக்கு விம்மி,
தேற்றத் தெளியாது அயர்
சிற்றவைபால் இருந்தான்,
ஆற்றல் துணைத் தம்பிதன்
வில் - புயல், அண்ட கோளம்
கீற்று ஒத்து உடைய, படும்
நாண் உரும் ஏறு கேளா.
வேற்றுக்கொடியாள் - மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி;
விளைவித்தவினைக்கு - உண்டாக்கிய துன்பச்செயலுக்கு; விம்மி -
கலங்கி; தேற்ற - ஆறுதல் கூறவும்;தெளியாது -மனம் சமாதானம்
அடையாமல்; அயர் - சோர்கின்ற; சிற்றவைபால்இருந்தான்-
சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல்-
வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்-தனக்குத் துணையாகிய இலக்குவனது;
வில்புயல் - வில் என்கிற மேகத்திருந்து;அண்ட கோளம் - உலக
உருண்டை; கீற்று ஒத்து உடைய- கீறுகீறாகப்பிளவுபட்டுத் தரும்படி;
படும் - உண்டாகிய; நாண் உரும் ஏற- நாணொலியாகிய
இடியேற்றொலியை; கேளா - கேட்டு.
இராமன் சுமித்திரை மாளிகை சென்றதை இப்படலத்து
இருபத்தெட்டாம் பாடலிற் காண்க.கேளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம். அது ‘வந்தான்’ என அடுத்த பாட்டில் முடியும். 120