கையை விடு !

அவன் அயலூர் செல்லுகிறான். காதலி அவன் அயலூரில் பல நாள் தங்கிவிடுவானோ என்று ஐயப்படுகிறாள். அவன் தினம் தவறாமல் அவளைச் சந்திப்பதாக உறுதி கூறுகிறான். அதற்குமேல் அவளுக்குப் பேசுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுக்கும் பேசுவதற்குப் பொருள் கிடைக்கவில்லை. அவளே மீண்டும் பேச்சைத் தொடங்குறாள். அவன் உணர்ச்சி வெறியில் அத்து மீறுகிறான். அவள் “கழுத்தில் தாலியேறட்டும், இப்பொழுது கருவமணிப் பாசி மட்டும் தானே கழுத்தில் இருக்கிறது? உனக்கு நான் சொந்தமில்லையே! ” என்று காட்டி அவனை வழிப்படுத்துகிறாள்.
காதலி: அஞ்சாறு பேர்களோடு
பஞ்சாயம் பேசயிலே
மின்னுதையா உங்க லேஞ்சி
மூணுமைல் தூரத்துக்கு
காதலன்: வாடின பூப்போல
வழிகாத்து நிக்கவேண்டாம்
தேடாதே எங்கனியே
தினம் வருவேன் இந்த வழி
காதலி: போனா வருவீரோ
பொழுது ஒரு நாள் தங்குவீரோ
என்னை மறந்து இன்னு
இருப்பீரோ இராத்திரிக்கு
காதலன் : இருப்பிலும் இருப்பேனோ
இன்னும் கண்டாப் பேசுவனோ
பாதையிலே கண்டவுடன்
பாவி மனம் கல்லானேன்
காதலி : மருத அறிஞ்சவரே
மாமருத பார்த்தவரே
கொட்டு எறிஞ்சவரே
கோபமென்ன என்மேலே
காதலன் : புள்ளி ரவிக்கக்காரி
புளியம் பூச் சேலைக்காரி
மானு நிறத்துக்காரி
மறப்பது எக்காலம்
மின்னல் வேகத்துக்கும்
மீளவிட்டான் தூரத்துக்கும்
அன்ன நடை அழகுக்கும்
ஆலவட்டம் போடுதடி
காதலி : இருந்தா குழல் சரியும்
எந்திரிச்சாப் பூச்சரியும்
நடந்தா நாடிளகும்
நான் வணங்கும் சாமிமேலே
காதலன் : கேட்டனடி ஒரு வருஷம்
கெஞ்சினனே நெஞ்சுருக
மாட்டேன்னு சொன்னவளை
மலத்தினனே காட்டுக்குள்ளே
காதலி : கட்டி அழுத்துதையா
கருவமணி விம்முதையா
தோகை அழுத்துதையா
தொரை மகனே கையை விடு.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-------------