கார்முகப் படலம் - 780
780.
‘ஞான முனிக்கு ஒரு நாண் இலை’ என்பார்;
‘கோன் இவனின் கொடியோன் இலை’ என்பார்;
‘மானவன் இச் சிலை கால் வளையானேல்.
பீன தனத்தவள் பேறு இலள்’ என்பார்.
ஞான முனிக்கு- தத்துவ ஞானியான விசுவாமித்திரனுக்கு; ஒரு
நாண் இலை - சிறிதும் நாணமில்லை;(உலகத்தவர் நம்மைப் பற்றி
என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இப்
பெரிய வில்லை இச் சிறியவனை நாணேற்றுமாறு செய்தான்); என்பார்
- என்று சில மாதர் கூறுவர்; கோன் இவனின் - (இச் சிறுனை
வில்லை வளைக்குமாறு கூறிய) இந்த அரசனைக் காட்டிலும்;
கொடியோன் - கொடியன் ஒருவன்; இலை என்பார்- இல்லை என்று
சொல்வார்கள் (சில மாதர்); மானவன் - வீரனாகிய இந்தக் குமரன்;
இச் சிலை - இச் சிவ தனுசை; கால் வளையானேல் - இரு
முனைகளையும் வளைக்கா விட்டால்;(அப்போது); பீன தனத்தவள் -
பருத்த கொங்கைகளுள்ள இச் சீதை; பேறு இலள் - திருமண
வாழ்க்கையை இழந்தவளாவாள்; என்பார் - என்று கூறுவர் (சில
மாதர்).
ஞான முனி - உலக நடை அறியாதவன் என்பது குறிப்பு.
மானம்-பெருமை. வீரம். பீனம் - பருமை. 31
