கார்முகப் படலம் - 776

bookmark

காமன் மங்கையர்மேல் கணை தொடுத்தல்

 மங்கையரின் மனநிலையும் வாய்மொழியும்

776.

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.
  
தூய தவங்கள்- புனிதமான தவங்களை;தொடங்கிய தொல்லோன்
-  தொடங்கி  முடித்த பழையவனான கோசிக முனிவனால்;  ஏயவன் -
ஏவப்பெற்ற  இராமன்;  வல்வில் இறுப்பதன் முன்னம் - அந்த வலிய
வில்லைக்  (கையில்  எடுத்து  முறிப்பதற்கு   முன்பே;  அனங்கன்  -
மன்மதன்;   சேயிழை   மங்கையர்  -  செவ்விய  அணிகள்  பூண்ட
பெண்களின்;   சிந்தை  தொறு  எய்யா  -  மனம்  தோறும்  (மலர்
அம்புகளை)   எய்து;   ஆயிரம்   வில்லை  -  மிகப்பல  விற்களை;
இறுத்தான் - முறித்தான்.

இராமன்     சிவதனுசைக் கையில் எடுக்கச்   சென்றபோது பார்த்த
மங்கையர்  பலரும்  காமதேவனின்  மலர்க்    கணைக்கு இலக்காயினர்
என்பது.

தொடங்கிய     பெருந் தவங்களை விடாது செய்து   முடித்து முழு
வெற்றியும்  பெற்ற  முதியோன் ஆதலின் ‘தூய  தவங்கள்  தொடங்கிய
தொல்லோன்’ என்றார்.                                      27