எழுச்சிப் படலம் - 846
இளைஞர் செயல் கூறுவன (846-851)
காதல் நாடகம்
846.
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான். நெறி; அந்தரில் சென்று. ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்.
வார்குலாம் முலை- (ஒரு பெண்ணின்) கச்சணிந்த தனங்களில்;
வைத்த கண் - பதித்த கண்களை; வாங்கிடப் பேர்கிலாது -
(அவற்றை) விட்டு வாங்காமல்; பிறங்கு - விளங்கும்; முகத்தினான் -
முகத்தையுடைய ஒருவன்; நெறி தேர்கிலான் - (தான் செல்லும்) வழி
அறிய முடியாதவனாய்; அந்தரில் சென்று - குருடர் போலச் சென்று;
ஒரு மூரி மா மதம் - ஒப்பற்ற வலிய பெரிய மதமுள்ள; யானையை -
யானையின் மேல்; முட்டினான் - முட்டிக் கொண்டான்.
மகளிர் தனங்களில் அழுந்திய தன் கண்ணை மீட்க முடியாத
ஒருவன் போகும்வழியில் ஒரு மத யானைமீது மோதிக் கொண்டான்
என்பது. வாங்கிட - செய்து என் எச்சம் ‘செய’ எனத் திரிந்தது.
காமத்தால் கண் கெடுதல் இயல்பாதலின் அந்தரில் சென்று என
இருபக்கமும் பொருந்திய உவமையைத் தந்தார். 30
