எழுச்சிப் படலம் - 833

bookmark

மகளிரைத் தழுவி மைந்தர் செல்லுதல்

833.    

வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு. மாப் பிடி
புல்லிய களிறு என. மைந்தர் போயினார்.
 
வெறித்த  குஞ்சியர் -   (மலர்மாலை   முதலியவற்றால்)   மணம்
பொருந்திய   தலைமயிரினையுடையவரும்;   கல்லினைப்   பழித்து -
மலையைத்   தமன்கு  ஒப்பாகாது   என   இகழ்ந்து;  உயர்  கனகத்
தோளினர்     -     மேம்பட்ட     பொன்னணிகளைப்     பூண்ட
தோள்களையுடையவருமாகிய;   மைந்தர் -  ஆடவர்;  வில்லினர்  -
வில்லை  ஏந்தியவரும்;  வாளினர் - வாளினை ஏந்தியவருமாகி;  மாப்
பிடி புல்லிய - பெருமை மிக்க பெண் யானையைத் தழுவிய; களிறென
-ஆண்யானையைப்  போல; வல்லியின்  மருங்கினர் - கொடிபோன்ற
இடையை   யுடையவர்களாகிய   தத்தம்   மனைவியரின்;    மருங்கு
போயினார் - பக்கத்தில் சென்றனர்.

மகளிரின் படைக்குப்  பாதுகாவலாக  அவர்களை  யடுத்து  வில்லும்
வாளும் ஏந்திய மைந்தர் சென்றார் என்பது கருத்து.

மகளிரின்     பக்கத்தே செல்லும் ஆடவர்க்குப்  பெண்யானையைப்
புல்லிய    களிறு    உவமையாயிற்று.    வில்லினர்    வாளினர்   -
முற்றெச்சங்கள்                                             17