எழுச்சிப் படலம் - 834
மகளிர் சிவிகை செல்லுதல்
834.
மன்றல் அம் புது மலர் மழையில் சூழ்ந்தெனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றலால்.
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம்போல்.
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே.
மன்றல் அம் புதுமலர்- நல்ல மணத்தோடு கூடிய அழகிய
புதுமலர்கள்; மழையிற் சூழ்ந்தென - மேகத்தில் சூழ்ந்தாற் போல;
துன்று - (மலர்கள்) நெருங்கிய; இரு கூந்தலார் - மிக்க
கூந்தலையுடைய பெண்களின்; முகங்கள் தோன்றலால் - முகங்கள்
மட்டும் காணப்படுவதால்; ஒன்று அலா முழுமதி - ஒன்று அல்லாத
மிகப் பலவாகிய நிறைமதிகள்; ஊரும் - ஏறிச் செல்லுகின்ற; மானம்
போல் - விமானங்களைப் போல; அவர் சிவிகை ஈட்டம் - மகளிர்
ஏறிச் செல்லுகின்ற பல்லக்குக் கூட்டங்கள்; சென்றன - சென்றன.
கூந்தல்மேல் மலர் சூழ்ந்திருப்பது மேகத்தில் மலர்
சூழ்ந்திருப்பதுபோலும் என்றார்.
பல்லக்குகளில் பெண்கள் தம் முகம் மட்டும் தெரியுமாறு
முக்காடிட்டு ஊர்ந்து செல்வதால் அச் சிவிகைகள் பல நிறைமதிகள்
ஏறிச் செல்லும் விமானங்களைப் போலும் என்றார். - தற்குறிப்பேற்ற
அணி. மழை - ஆகுபெயர். மானம் - விமானம் என்பதன்
முதற்குறை. 18
