உண்டாட்டுப் படலம் - 1078
ஒருத்தி ஊடலைப் பாடிக் குறிப்பித்தது
1078.
மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி. தன் பாங்குளார்களோடு
ஊடினது உரைசெயாள். - உள்ளத்து உள்ளதே.
ஒருத்தி. ஊடினது தன் பாங்குளார்களோடு உரை செயாள்- ஒரு
மங்கை. தான் தன் கணவனோடு பிணங்கியுள்ளதைத் தன்
தோழியரோடு வாய்திறந்து சொல்லாதவளாய்; மாடகம் பற்றிய மகர
வீணையை - முருக்காணி பொருந்திய மகரமீன் வடிவமைந்த
வீணையினை; தன் தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
- இதழ்கள் விரிந்த தாமரைப் பூப்போன்ற தன் கரங்கள் சிவப்புறும்படி
தொட்டு; தன் உள்ளத்து உள்ளது பாடினள் - தன் உள்ளத்துள்ளே
மறைந்த ஊடற் காரணங்களைத் (தன் கணவன் மட்டுமே குறிப்பால்
உணர்ந்து கொள்ளுமாறு வீணையிலிட்டுப்) பாடினாள்.
தன் உள்ளத்துள்ளதைப் பாங்கிமார் அறியின். அவனைத்
தூற்றுவர்; அதனை இவள்பொறாள் ஆதலின். “உரை செயாள்;
பாடினாள்” என்றார். கணவன் குறையைப் பிறர் அறியாமல் பேணும்
பெண்மையின் தனிப்பண்பு சுட்டினார். 32
