உண்டாட்டுப் படலம் - 1074

bookmark

காதலாள் ஒருத்தி கிளியைக் கடிதல்

1074.

மன்றல் நாறு ஒரு சிறை இருந்து. ஒர் வாணுதல்.
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ. ‘என் ஆவியை
இன்றுபோய்க் கொணர்கிலை; என் செய்வாய் எனக்கு?
அன்றிலோடு ஒத்தி’ என்று அழுது. சீறினாள்.
 
மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாள்நுதல்-மணம் வீசும் ஓர்
இடத்திலே   இருந்து  கொண்டு.   ஒளிபெறும்  நெற்றியை  யுடையாள்
ஒருத்தி;   தன்   துணைக்  கிள்ளையைத்   தழீஇ   -   தனக்குத்
துணையாகவுள்ள  கிளியைத்  தழுவி;  என் ஆவியை இன்று போய்க்
கொணர்கிலை  -  என்  உயிர்  நாயகனை  இன்று  (தூதாகப்) போய்
அழைத்து  வந்தாய்  அல்லை;  என்  செய்வாய்  எனக்கு  -  (இந்த
உதவியைத்  தவிர வேறு) எனக்கு என்ன  உதவி  செய்ய இருக்கிறாய்?;
அன்றிலோடு   ஒத்தி   - (பிரிந்தாரைத்  தன்  ஒலியால்  வருத்தும்)
அன்றிலைப்  போலவே நீயும் இருக்கிறாய்; என்று அழுது சீறினாள் -
என்று கூறிப் புலம்பி வெகுண்டு கொதித்தாள்.

பிரிந்தாரைச்   சேர்க்கும்  உதவியிலும் பெரிய உதவி உலகில் வேறு
இல்லை.  நீ.  போய்  அவரை  அழைத்து  வாராமல்  அவர்  பெயரை
மட்டும் ஓயாது கூவி என்னை துயர் உறுத்துகிறாய்;  அன்றில்  வெளியே
கூவுகிறது;   நீ   உள்ளே   கூவுகிறாய்.  ஆக.   துயர்   உறுத்துவதில்
இரண்டுபேரும்  ஒன்றே; இடமே வேறுபாடு என்கிறாள்.  மேல் பாடலில்
கிளி   கூவலில்  மகிழ்ந்தாள்.  இப்பாடலில்.   அதுவும்   வெறுத்தாள்.
பிரிந்தார்க்குத் துயர்தரும் பொருள்களுள் அன்றிலும் ஒன்று.         28