இந்திரா காந்தி
இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.
கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இன்னும் சொல்லப் போனால் விடுதலைப் போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில் தான் இந்திரா பிறந்தார். அப்பாவும், தாத்தாவும் அடிக்கடி சிறைக்குப் போவதையும் விடுதலைப் போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே இந்திராவின் இளமைக் காலம் மெல்ல நகர்ந்தது .
இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியை தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுவது நாடு அறிந்தது . சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எவ்வித இரத்த உறவுகளும் இல்லையென்பதும் அவர் மரியாதை நிமித்தம் காந்தி எனும் பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 1936 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் லண்டனை மையமாகக் கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினராகவும் செயற்ப்பட்டார். இதனிடையே அவர் கல்விகற்ற காலப்பகுதியில் பிரோசு காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார்.
அதற்கமைய 1959 ஆம் ஆண்டு மற்றும் 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் அவர் தனது தந்தையான நேருவின் பிரதிநிதியாகவே பதவியில் நடிக்க வேண்டியிருந்ததை அவருக்கு பெரிதாக ஈடுபாடின்றி காணப்பட்டது. பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.
1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.
1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பெரிதாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.
எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.
எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது.
ஒரு பிரதம மந்திரியாக அவருக்கு கிடைத்த அனைத்து வளங்களையும் அவதானமாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்து;க்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார்.
மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் குறித்த விடயமானது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் குறித்த விடயமானது அவரது செல்வாக்கை பாதித்த நிலையில் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் படுதோல்வியடைந்தமைக்கு அதுவும் காரணமாக அமைந்தது.
இதனிடையே இவரின் பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு தேசி அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும் இரகசிய பெயருடன் இராஜஸ்தானில் நிலத்திற்கடியில் குறித்த அணு சோதனை நடாத்தப்பட்டது. குறித்த அணு சோதனை இந்தியாவை உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது.
மேலும் 1960 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது. மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடந்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார். இந்த செயல் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் சினம்கொள்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி புது டில்லியில் தனது தலைமை அமைச்சர் இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று, இந்தியாவை சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் இந்திரா காந்தி. மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனதிலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார்.
