ஸ்ரீ சத்ய சாயி பாபா
ஸ்ரீ சத்ய சாயி பாபா இவர் ஒரு தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் "இறை அவதாரம்" எனப் போற்றப்படுகிறார். இவர் ஒரு மதப் பரப்புனரும் சித்தரும் ஆவார். விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர். சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவர் பெயரில் ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
சத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.
சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே பக்திமார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
அவர் படிக்கும் பொழுதே , தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே!’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால், பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து னார்.
1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறது. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல கிராமங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தினை சீர் செய்து, மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார். பிறகு 1968 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜூன் 6, 1993 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள அவருடைய இல்லத்திற்குள் நான்கு இளைஞர்கள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து, கொலை செய்ய முயன்றனர். இதில் இரு பணியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அத்துமீறி நுழைந்த நால்வரும், காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இவர் மீது நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஸ்ரீ சத்திய சாய் பாபா தன்னுடைய இறுதிகாலத்தில், உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சத்திய சாய் மருத்துவக்கழக மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 28 தேதி அனுமதிக்கப்பட்டார். பிறகு அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டனர். இருந்தபோதும் 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.
பகவான் சத்திய சாய் பாபா அவர்களுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆன்மீக பக்தியில் ஈடுபாடு கொண்ட பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும், வர்த்தகர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக வழிபாடு செய்து வருகின்றனர்.
இவ்வாறாக எல்லோரது அன்பையும் பெற்ற ஸ்ரீ சத்யா சாய் பாபா 2011 , ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார்.
