வரைக்காட்சிப் படலம் - 943
அம்மலையிற் கண்ட பல நிகழ்ச்சிகள் (943-951)
மலை நிகழ்ச்சிகளை மாந்தர் காணுதல்
943.
கோடு உலாம் நாகப் போதோடு
இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார். களி வண்டு ஓச்சித்
தூநறுந் தேறல் உண்பார்.
கேடு இலா மகர யாழில்
கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும்
பரிமுக மாக்கள் கண்டார்.
கோடு உலாம் - கொம்புகளில் பூத்த; நாகப் போதோடு -
சுரபுன்னை மலர்களோடு; இலவங்க மலரும் கூட்டி - இலவங்க
மலரையும் சேர்த்து; சூடுவார் - அணிகின்றவரான அம்
மலைவாணர்கள்; களி வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை
ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல் உண்பார் - தூய மணம் பொருந்திய
மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு)
குற்றம் இல்லாத மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் -
இரட்டையர்களான கின்னரமென்னும் தேவசாதியர் பாடுகின்ற;
பாடலால் ஊடல் நீங்கும் - இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல்
நீங்குகின்றன; பரிமுக மாக்கள் கண்டார் - குதிரை முகங்கொண்ட
தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள்.
பூவைப் பறித்துச் சூடுதலும் மதுவைப் பருகுதலும். இனிய
பாடலைக் கேட்டலும் தேவசாதியினர் செயல்களைக் கண்டு
மகிழ்வதுமாக அங்கே சென்ற மக்கள் இருந்தார்கள் என்பது. கின்னர
மிதுனம்: ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான
தேவசாதியர். பரிமுக மாக்கள்: குதிரை முகமும் மனித உடலும்
கொண்ட தேவசாதியர். 16
