நீர் விளையாட்டுப் படலம் - 1024
1024.
பொன்-தொடி தளிர்க் கைச் சங்கம்
வண்டொடு புலம்பி ஆர்ப்ப.
எற்று நீர் குடையும்தோறும். ஏந்து
பேர் அல்குல் நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி.
சீறடி கவ்வ. ‘காலில்
சுற்றிய நாகம்’ என்று.
துணுக்கத்தால் துடிக்கின்றாரும்.
தளிர்க்கைப் பொன்சங்கத்தொடி - தளிர் போன்ற கைகளில்
அணிந்த பொன்னாலும் சங்குகளாலும் ஆன வளையல்கள்;
வண்டொடு புலம்பி ஆர்ப்ப - (பொய்கையில் ஒலிக்கின்ற)
வண்டுகளின் ஒலிகட்கு மாறுபட்டு ஒலிக்க; எற்றும் நீர்குடையும்
தோறும் - (அலை) மோதுகின்ற நீரில் மூழ்கும்போதெல்லாம்;
ஏந்துபேர் அல்குல் நின்று - உயர்ந்த பெரிய நிதம்பத்திலிருந்து;
கற்றை மேகலைகள் நீங்கி - (அலைக்கழிக்கப் பெற்றதனால்) (பல)
கோவையாகவுள்ள மேகலையென்னும் இடையணி கழன்று; சீறடி கவ்வ
- சிறிய பாதங்களைப் பற்றும் போது; காலில் சுற்றிய நாகம் என்று -
பாதங்களைச் சுற்றிக்கொண்ட பாம்பென்று கருதி; துணுக்கத்தால்
துடிக்கின்றாரும் - நடுக்கத்தால் துடித்துப் போகின்றவர்களும்.
(ஆயினார் என்று கூட்டி. நான்காம் பாடலிலிருந்து வந்த உம் ஈற்று
உயர்திணைச் சொற்களை முடித்துக்கொள்க).
பொற்றொடி = பொன்+தொடி. இடையணி அறுவதும் தெரியா
அளவிற்கு நீர்விளையாட்டு ஆர்வம் மிக்கிருந்தது என்க. நாகம் -
பொதுப் பெயராய்ப் பாம்பினைச்சுட்டி நின்றது. பலரும் மூழ்கி
எழுவதால் நீர் அலையெறிந்து கொண்டிருந்தது என்பார். ‘ஏற்றும் நீர்’
என்றார். மேகலை காலில் சுற்றியது ஒருமுறையன்று; பலமுறை
என்பார். “நீர் குடையும் தோறும்” என்றார். மேகலை காலில் சுற்றிய
ஒவ்வொரு முறையும் காலில் சுற்றியது நாகமே என நினைந்த மகளிர்
பேதைமை மிகுதியைச் சுட்டினார். ஒன்றை மற்றொன்றாக நினைத்து
மயங்குவதால் மயக்க அணி ஆயிற்று. 11
