நகர் நீங்கு படலம் - 1844

இலக்குவனுக்கு இராமன் மொழிதல் (1844-1845)
இலக்குவனைப் பெற்றோருடன் இருக்க இராமன் கூறுதல்
1844.
தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
‘வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்’ எனா,
தான்புனை சீரையை - (இராமன்) தான் அணிந்துள்ளது போன்ற
மரவுரியை; தம்பி சாத்திட - தம்பியாகியஇலக்குவனும் அணிந்துகொள்ள;
தேன் புனை தெரியலான்செய்கை நோக்கினான்- தேன் நிறைந்த
மாலை அணிந்த இலக்குவனின் செயலை இராமன் பார்த்து;‘வான்புனை
இசையினாய்! - தேவருலகம் புகழும் புகழினை உடையாய்; நீ
மறுக்கிலாது - நீ மறுக்காமல்; யான் புகழ்- நான் சொல்லுகின்ற;
இனையது ஓர் உறுதி - இத்தகைய ஒரு நல்லசொல்லை; கேள்’-
கேட்பாயாக; ’ எனா - என்று சொல்லி.
புனை சீரை என்றாரேனும் புனைந்தது போலும் சீரை என்றுபொருள்
கொள்க. ‘தம்பியும் சாத்திட’ என்ற எச்சவும்மை வருவித்துரைக்கப்பட்டது.
தெரியலான் செய்கை - இலக்குவன் செயல். பார்த்து; முற்றெச்சம்
இலக்குவன் செய்ததைப்பார்த்து இராமன் ஒரு கருத்தைக் கூறலானான். 149