நகர் நீங்கு படலம் - 1813

1813.
விண் நாட்டவர், மண்ணவர்,
விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும்
நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர்,
வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன். இனிப்
பேர் உலகத்துள்’ என்னா.
‘விண் நாட்டவர் - தேவர் உலகத்துள்ளவர்; மண்ணவர் -
மண்னுலகில் உள்ளவர்; விஞ்சையர் - வித்தியாதரர்; நாகர் - பாதல
உலகத்தில் வசிப்போர்; மற்றும் - வேறாக; எண் நாட்டவர் -
எண்ணப்படும் நாட்டில் உள்ளவர்; யாவரும் - அனைவரும்; நிற்க -
கிடக்கட்டும்; (அவரினும் மேம்பட்டு) ஓர் மூவர்ஆகி - மூன்று பேராக
இருந்து; மண் நாட்டுநர் - உலகத்தை நிலை நிறுத்திக்காக்கின்ற
திருமாலும்; காட்டுநர் - படைக்கின்ற பிரமனும்; வீட்டுநர் - அழிக்கின்ற
உருத்திரனும் ஆகிய மூவர் (துணையாக); வந்த போதும் - வந்தாலும்;
இனிப் பேர் உலகத்துள் பெண் நாட்டம் - இனி இவ்வுலகில் பெண்ணின்
மனக்கருத்துக்கு; ஒட்டேன் - உடன்படேன்; என்னா - என்று சொல்லி.
யார் துணையாக வரினும் கைகேயியின் மனக்கருத்து நிறைவேற
விடமாட்டேன் என்பான் இவ்வாறுகூறினான். நாட்டுதல் - நிலைபெறுத்தல்-
நிலைநிறுத்தல் அதாவது காத்தலாம். “உலகம்யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும்” என்பது (1.) காண்க. 118