நகர் நீங்கு படலம் - 1801

1801.
‘நின்று தவம் இயற்றித்
தான் தீர நேர்ந்ததோ?
அன்றி, உலகத்துள்
ஆர் உயிராய் வாழ்வாரைக்
கொன்று களையக்
குறித்த பொருளதுவோ?
நன்று! வரம் கொடுத்த
நாயகற்கு, நன்று!’ என்பார்.
‘தான் - சக்கரவர்த்தி; தவம் இன்றி - (காடு சென்று) தவம் செய்து;
தீர நேர்ந்ததோ? - இவ்வுலகினின்று விடுதலை பெற உடன் பட்டதோ;
அன்றி -அதுவல்லாமல்; உலகத்துள் - இப்பூமியின்கண்; ஆர் உயிர்
ஆய்- அரியஉயிரோடு கூடி; வாழ்வாரை - வாழ்கின்ற மக்களையெல்லாம்;
கொன்று களையக்குறித்த பொருளதுவோ? - கொன்று அடியோடு அழிக்க மனத்தில் கருதிய காரியமோ; நன்று!- நன்றாயிருந்தது; வரம் கொடுத்த நாயகற்கு - வரம் கொடுத்த தயரதனுக்கு; நன்று! - வரம் கொடுத்த செயல் மிக நன்றாயிருந்தது;’ என் பார் -.
நன்று நன்று என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இவ்வரத்தால் இராமன் காடு
செல்லின் மக்கள்இறந்துபடுவர் என்பது அரசன் அறியாததன்று. அறிந்தே
மக்களைக் கொன்று தீர்க்க வரம்கொடுத்தானோ எனப் புலம்பினர்.
‘உலகத்துள்ளார் உயிராய் வாழ்வார் இராமனை உயிராகக்கொண்டு
வாழ்பவர் ஆகிய உலகினரை ’ எனினும் ஆம். 106