நகர் நீங்கு படலம் - 1767

சாப வரலாறு ((1767-1782))
1767.
‘வெய்ய கானத்திடையே,
வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று, கரியோடு
அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும்
கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச்
சென்றே மறைய நின்றேன்.
‘வேட்டை வேட்கை மிக - வேட்டையாடுதலில் விருப்பம்
மேற்செல்ல; வெய்யகானத்திடையே சென்று - கொடிய காட்டின்கண்
போய்; ஐய கரியோடு அரிகள் துருவித்திரிவேன் - அழகிய
யானையோடு சிங்கங்களைத் தேடிச் சுற்றுகின்ற யான்; கார் மிருகம்வரும்-
கரிதான விலங்காகிய யானை முதலிய வருகின்ற; ஓர் செய்ய நதியின்
கரைவாய்- ஒரு துறையொழுங்கு உடைய ஆற்றின் கரைக்கண்; கையும்
சிலையும் கணையும் கொடு - கையில் வில்லும் அம்பும் கொண்டு;
சென்று மறைய நின்றேன் - சென்று மறைவாகநின்றேன்.
ஐய - அழகாக எனப் பொருள்படும், வளர்ச்சியாலும் வனப்பாலும்
வியப்புத்தரும் எனலுமாம்.கார் மிருகம் - யானை, செய்ய நதி - துறை
ஒழுங்கு இங்கே ஆற்றுக்குச் செம்மை. அதனால்மனிதரும் தண்ணீர்
எடுக்க வசதியான ஆறு எனல் ஆகும். ‘ஏ’ இரண்டும் அசை. 73