நகர் நீங்கு படலம் - 1740

தயரதன் கைகேயியை நோதல் (1740-1742)
1740.
தா இல் முனிவன் புகல,
தளராநின்ற மன்னன்,
நாவில் நஞ்சம் உடைய
நங்கை தன்னை நோக்கி,
‘பாவி! நீயே, "வெங் கான்
படர்வாய்" என்று, என் உயிரை
ஏவினாயோ? அவனும்
ஏகினானோ?' என்றான்.
தா இல் முனிவன் புகல - குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு
சொல்ல; தளராநின்ற மன்னன் - வருத்தத்தால் தளர்கின்ற சக்கரவர்த்தி;
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி - நாக்கிலே விடம்
உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து; ‘பாவி! நீ என் உயிரை
வெங்கான் படர்வாய்' என்று-பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக்
கொடிய காட்டிற்குச் செல்க என்று; ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ;
அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;'
என்றான்-.
"நாகம் எனும் கொடியாள்தன் நாவின் வந்த சோகவிடம்" என
முன்னும் (1505.) வந்துள்ளதை‘நாவில் நஞ்சம் உடைய நங்கை'
என்பதனுடன் ஒப்பிடுக. ‘நீயே' ‘ஏ' காரம் பிரிநிலை. ‘ஓ'காரம் வினாப்
பொருட்டு. 46