நகர் நீங்கு படலம் - 1713

இராமன் மறுமொழி (1713-1719)
கோசலை வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்
1713.
‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான்.
‘அன்னையே! - தாயே; என்னை நீங்கி - என்னைப் பிரிந்து;
இடர்க்கடல் வைகுறும் - துன்பக்கடலில் தங்கியுள்ள; மன்னர்
மன்னனை -சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது - மன உறுதி செய்து
தைரியப்படுத்தாமல்; உடன் -என்னோடு; துன்னு கானம் - நெருங்கிய
காட்டிற்கு; தொடர - பின்பற்றிவர; துணிவதோ? - மனத்தில் நிச்சயிப்பது
தகுமோ; அறம் பார்க்கிலை ஆம்! - மனைவிக்குள்ள தருமத்தை
ஆராய்ந்து கருதவில்லை போலும்;’ என்றான் -.
மனைவியின் தர்மம் கணவனைக் காத்தல். ‘தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற,சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்றார்
வள்ளுவரும். (குறள். 56) இந்தப் பத்தினிதர்மத்தை இராமன் தன் தாய்க்கு
நினைவு படுத்தினான். 19