திருக்குரங்காடுதுறை

bookmark

பாடல் 879
ராகம் - பாகேஸ்ரீ 
தாளம் - திஸ்ரஏகம் (3) 

தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் 
தனந்தான தனத்தனனத் ...... தனதான 

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் 
கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும் 

அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்ததகரத் 
தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ் 

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் 
சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந் 

திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் 
தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ 

இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட் 
டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும் 

இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத் 
திருங்கான நடக்குமவற் ...... கினியோனே 

குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் 
கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா 

கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக் 
குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே. 
பாடல் 880 
தனத்தனந் தான தனதன 
தனத்தனந் தான தனதன 
தனத்தனந் தான தனதன ...... தனதான 

குறித்தநெஞ் சாசை விரகிகள் 
நவிற்றுசங் கீத மிடறிகள் 
குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங் 

குறைப்படுங் காதல் குனகிகள் 
அரைப்பணங் கூறு விலையினர் 
கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை 

பொறித்தசிங் கார முலையினர் 
வடுப்படுங் கோவை யிதழிகள் 
பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப் 

புரித்திடும் பாவ சொருபிகள் 
உருக்குசம் போக சரசிகள் 
புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ 

நெறித்திருண் டாறு பதமலர் 
மணத்தபைங் கோதை வகைவகை 
நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா 

நெருக்குமிந்த் ராதி யமரர்கள் 
வளப்பெருஞ் சேனை யுடையவர் 
நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே 

செறித்தமந் தாரை மகிழ்புனை 
மிகுத்ததண் சோலை வகைவகை 
தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந் 

திரைக்கரங் கோலி நவமணி 
கொழித்திடுஞ் சாரல் வயலணி 
திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே. 
பாடல் 881 
தனந்த தனத்தான தனந்த தனத்தான 
தனந்த தனத்தான ...... தனதான 

குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார 
வடங்கள் அசைத்தார ...... செயநீலங் 

குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது 
குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே 

உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி 
யுலந்து மிகக்கோலு ...... மகலாதே 

உறங்கி விழிப்பாய பிறந்து பிறப்பேனு 
முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே 

விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட 
விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் 

விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு 
விளங்கு முகிற்கான ...... மருகோனே 

தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை 
தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் 

தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு 
தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.