திருக்காளத்தி

பாடல் 446
ராகம் - கல்யாணி;தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.
பாடல் 447
ராகம் - கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
(எடுப்பு - அதீதம்), (விச்சில் 1/2 இடம்)
தனத்தா தத்தத் ...... தனதான
சிரத்தா னத்திற் ...... பணியாதே
செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
பாடல் 448
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன தனதான
பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி
தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே
சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார்
சிந்துவி லேயுற் றெழுந்து காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர்
திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய
சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன்
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.