தனிச்சயம்

பாடல் 954
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
பாடல் 955
ராகம் - சங்கரானந்தப்ரியா
தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வத குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.