ஞானமலை

bookmark

 பாடல் 609
தானதன தான தானதன தான 
தானதன தான ...... தனதான 

சூதுகொலை கார ராசைபண மாதர் 
தூவையர்கள் சோகை ...... முகநீலர் 

சூலைவலி வாத மோடளைவர் பாவர் 
தூமையர்கள் கோளர் ...... தெருவூடே 

சாதனைகள் பேசி வாருமென நாழி 
தாழிவிலை கூறி ...... தெனவோதி 

சாயவெகு மாய தூளியுற வாக 
தாடியிடு வோர்க ...... ளுறவாமோ 

வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர் 
வேதியர்கள் பூச ...... லெனஏகி 

வீறசுரர் பாறி வீழஅலை யேழு 
வேலையள றாக ...... விடும்வேலா 

நாதரிட மேவு மாதுசிவ காமி 
நாரியபி ராமி ...... யருள்பாலா 

நாரண சுவாமி யீனுமக ளோடு 
ஞானமலை மேவு ...... பெருமாளே. 
பாடல் 610 

தனதன தனத்த தான தனதன தனத்த தான 
தனதன தனத்த தான ...... தனதான 


மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக 
மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் 

மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் 
வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை 

அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி 
னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் 

றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது 
மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே 

தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை 
தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் 

தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு 
சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே 

எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத 
எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா 

இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக 
இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.